மீகோட பகுதியில் வெசாக் தானசாலையில் உணவிற்காகக் காத்திருந்த மக்கள் கூட்டத்தின் மீது கார் மோதியதில், மூன்று பெண்கள் மற்றும் மூன்று ஆண்கள் உட்பட ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேற்று இரவு அரங்கேறிய இந்த கொடூர விபத்தில் படுகாயமடைந்த மேலும் ஆறு பேர், அவசர சிகிச்சைக்காக ஹோமகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஹோமகம – மீகோட பகுதியில் உள்ள பிரதான வீதியோரம் அமைந்திருந்த வழிபாட்டிடத்தில், வரிசையில் நின்ற மக்கள் கூட்டத்தின் மீது வாடகைக் கார் ஒன்று மோதிவிட்டு நிறுத்தாமல் தப்பியோடியுள்ளது.
இந்த மோதலில் படுகாயமடைந்த 12 பேர் உடனடியாக ஹோமகம ஆதார மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி 6 பேர் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனைத் தரப்பினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதற்கிடையில், விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோட முயன்ற வாடகைக் காரின் சாரதியை பொலிஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.