பிரபல ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் மர்ம மரணம் தொடர்பான விசாரணைகளில் பேசப்பட்ட, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்குச் சொந்தமான வீடு ஒன்று குறித்து பொது நிறுவனங்கள் பற்றிய நாடாளுமன்றக் குழுவில் (COPE) அதிரடியான மற்றும் சர்ச்சைக்குரிய பல விபரங்கள் வெளிவந்துள்ளன.
சர்ச்சைக்குரிய இந்த வீடு கொழும்பு, மாத்தா வீதியில் அமைந்துள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு ஆகும். கடந்த 1999 ஆம் ஆண்டில், மகிந்த ராஜபக்ச அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் கொழும்பு தெற்குப் பிரிவுக்கு உட்பட்ட இந்த குடியிருப்பு வீடு அவரின் பெயரில் வாங்கப்பட்டுள்ளது.

இந்த வீட்டுக்காக வழங்கப்பட்ட ஆவண அட்டையில், மகிந்த ராஜபக்சவின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், அன்றைய அதன் மதிப்பு 45 லட்சம் ரூபாய் எனவும் பதிவாகியுள்ளது. ஆனால், இந்த பணத்தை அவர் செலுத்தியதற்கான எந்தவொரு அதிகாரப்பூர்வ ரசீதுகளும் (Receipts) அதில் இணைக்கப்படவில்லை என்று கோப் குழு கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
இதைவிட அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், தற்போது அந்த வீட்டுக்குரிய முக்கிய ஆவணங்கள் எதுவும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தெற்குப் பகுதி அலுவலகத்தில் இல்லை என்பதும், அவை காணாமல் போயுள்ளதும் தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து உடனடியாக தீவிர விசாரணைகளை நடத்தி, அந்த ஆவணங்கள் எவ்வாறு காணாமல் போனது என்பதைக் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அதிகார சபை அதிகாரிகளுக்கு கோப் குழு உத்தரவிட்டுள்ளது.