மொனராகல, பிபிலை – ரதலியத்த பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பெண் தொடர்பான தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் சந்திரிகா ஷியாமலி என்ற 40 வயதுடைய பெண் அவரது வீட்டின் வரவேற்பறையில் இரத்த வெள்ளத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவருக்கு அருகிலேயே கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சந்தேக நபரான துமிந்த என்பவர் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்ததை பொலிஸார் கண்டறிந்தனர். உயிரிழந்த பெண் கொழும்பில் அழகு நிலையம் ஒன்றில் பணியாற்றி வந்தவர் என்பதும், அண்மையில் தொழில் நிமித்தம் சந்தேக நபருடன் துபாய் சென்று திரும்பியவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் தனது மனைவியை மிரட்டி வந்ததாகவும், அவதூறான புகைப்படங்களை அனுப்பித் தொல்லை கொடுத்ததாகவும் உயிரிழந்த பெண்ணின் கணவர் தெரிவித்துள்ளார். எனினும், அவர்களுக்கிடையே தொழில் ரீதியான தொடர்பைத் தவிர வேறெதுவும் இல்லை என மனைவி தன்னிடம் கூறி வந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். கணவர் வேலைக்குச் சென்றிருந்த நேரத்தில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சந்தேக நபருக்கும் உயிரிழந்த பெண்ணிற்கும் இடையே நிலவிய முறையற்ற தொடர்பு அல்லது கொடுக்கல் வாங்கல் தொடர்பான தகராறே இந்தக் கொலைக்குக் காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
_________________________________________________________________________________________
Police have released details regarding the brutal murder of a 40-year-old woman in Monaragala, who was found dead with sharp tool injuries in her living room. The suspect was found nearby with self-inflicted neck injuries; investigations suggest the motive may be linked to an illicit affair or a financial dispute following their recent business trip to Dubai.