வேடநத்தம் பள்ளி மாணவி கொலை வழக்கில் குற்றவாளி தர்மமுனீஸ்வரனுக்கு இரட்டை தூக்கு தண்டனை விதித்து தமிழகத்தின் போக்சோ நீதிமன்ற நீதிபதி பிரீத்தா தீர்ப்பளித்தார்.
விளாத்திகுளம் பகுதியில் நடந்த கொடூரம்: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே இருக்கும் வேடநத்தம் கிராமத்தின் காட்டுப்பகுதியில், கடந்த மார்ச் மாதம் 11ஆம் தேதியன்று 12ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி சடலமாக கண்டெடுக்கப்பட்டாள்.
இந்த அதிர்ச்சியூட்டும் கொலைச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்துவதற்காக, காவல்துறை தரப்பில் உடனடியாக 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
விசாரணையின் ஒரு பகுதியாக, அந்த காட்டுப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த காற்றாலை சிசிடிவி (CCTV) காட்சிகளைப் போலீஸார் ஆய்வு செய்தபோது, சந்தேகத்திற்குரிய நபர் ஒருவர் பைக்கில் செல்லும் காட்சிகள் அதில் பதிவாகியிருந்தன.
அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட அதிரடி விசாரணையில், ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியைச் சேர்ந்த தர்மமுனீஸ்வரன் என்பவனைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்தக் கொடூரக் கொலை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், நேற்று இதற்கான இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டது.
தீர்ப்பளிப்பதற்கு முன்பாக நீதிபதி குற்றவாளியைப் பார்த்து, “உன் கூட இப்போ உன் அம்மா மட்டும்தான் இருக்காங்க. உன்னோட மனைவியும், மகளும் உன்னைவிட்டு பிரிஞ்சு போயிட்டாங்க.
ஏற்கனவே குற்றப்பின்னணி கொண்ட நீ, இப்போ செஞ்சிருக்கிற இந்த காரியம் ரொம்பவே கொடூரமானது. அந்தப் பெண்ணின் பிரேத பரிசோதனை அறிக்கையைப் படிச்சப்போதான், நீ எவ்வளவு இரக்கமில்லாம நடந்துகிட்டிருக்கேன்னு தெரியவந்தது.
இந்தக் கொடூரத்தைச் செய்யும்போது உனக்கு உன்னோட சொந்த மகள் ஞாபகம் வரலையா? அந்தப் பிள்ளையைப் பாதுகாக்கணும்னு உனக்குத் தோணலையா?
இனிமேல் பெண் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் எதிராகக் கொடுமைகள் செய்ய நினைப்பவர்களுக்கு உனக்குக் கொடுக்கும் இந்தத் தண்டனை ஒரு பாடமாக இருக்கட்டும்” என்று கூறி அவனுக்கு இரட்டை ஆயுள் மற்றும் இரட்டைத் தூக்குத் தண்டனை விதித்து அதிரடி உத்தரவிட்டார்.
The POCSO court in Tamil Nadu has sentenced the convict, Dharmamuneeswaran, to a double death penalty for the brutal rape and murder of a 12th-grade schoolgirl in Vedanatham, Thoothukudi. The criminal was traced through wind farm CCTV footage, and during the final verdict, Judge Preetha severely condemned his heinous actions, stating that this strict punishment should serve as a strong deterrent against crimes targeting women and children.