யாழில் வெளிநாட்டில் வசிப்பவரின் சொகுசு வீட்டினை வாடகைக்கு பெற்று வீட்டினை விபச்சார நடவடிக்கைக்கு பயன்படுத்திய குற்றச்சாட்டில் சந்தேக நபர்களை விளக்ககமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோப்பாய் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, குறித்த வீடு சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்ட வெளிமாவட்டங்களைச் சேர்ந்த மூன்று பெண்கள் உள்ளிட்ட நால்வரையும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, திருநெல்வேலி பகுதியில் வெளிநாட்டில் வசிக்கும் ஒருவருக்குச் சொந்தமான சொகுசு வீட்டினை கிளிநொச்சியைச் சேர்ந்த நபர் ஒருவர் வாடகைக்கு எடுத்துள்ளார்.

ஆனால், அந்த வீட்டிற்குச் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஆண்கள் மற்றும் பெண்கள் அடிக்கடி வந்து செல்வதை அவதானித்த அப்பகுதி மக்கள், அது குறித்து கோப்பாய் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர். இந்தத் தகவலையடுத்து, பொலிஸார் அந்த வீட்டினை ரகசியமாகக் கண்காணித்து வந்தனர். சில நாட்களாகத் தொடர்ந்த இந்த வேவு நடவடிக்கையை அடுத்து, நேற்று முன்தினம் (10) பொலிஸார் அந்த வீட்டை அதிரடியாக முற்றுகையிட்டனர்.
இந்த முற்றுகையின் போது, வீட்டிலிருந்த வெளிமாவட்டங்களைச் சேர்ந்த மூன்று பெண்கள் மற்றும் வீட்டை வாடகைக்கு எடுத்திருந்த கிளிநொச்சி நபர் ஆகியோரை பொலிஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நால்வரிடமும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், நேற்று (11) அவர்கள் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி, அவர்கள் அனைவரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
_____________________________________________________________________________________________
The Jaffna Magistrate’s Court has remanded four individuals, including three women from outside the district, for allegedly operating a brothel in a luxury house in Thirunelveli. The property, owned by an expatriate, had been rented by a man from Kilinochchi who reportedly used it for illegal activities. Following a tip-off from locals about suspicious movements, Kopay Police conducted a surveillance operation and raided the premises on the 10th, leading to the arrests and subsequent legal action.