சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் 22 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அந்தக் கல்லூரியின் கேன்டீனில் பணியாற்றி வந்த ஊழியர் மற்றும் உணவக உரிமையாளர் உள்ளிட்ட மூன்று பேரை சைதாப்பேட்டை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், கேன்டீனில் வேலை செய்து வந்த குணசேகர் என்பவர் அந்தப் பெண்ணை முதலில் துன்புறுத்தியதாகத் தெரிகிறது. அதனைத் தொடர்ந்து அவருடன் பணியாற்றிய கார்த்திகேயன் மற்றும் கேன்டீன் உரிமையாளர் முத்துச்செல்வம் ஆகியோரும் இந்தப் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் அழுதுகொண்டே அங்கிருந்த காவலாளியிடம் முறையிட்டதை அடுத்து, இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.

இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், குற்றவாளிகள் மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை உடனடியாகச் சிறையில் அடைத்தனர். இச்சம்பவத்தைக் கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் மற்றும் கல்லூரி மாணவர்கள் இணைந்து கல்லூரி வளாகத்தில் நீதிகேட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏற்கனவே சென்னையில் பீகாரைச் சேர்ந்த குடும்பத்தினர் படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சி மறைவதற்குள், ஒரு அரசு கல்வி நிலையத்திலேயே இத்தகைய கொடூரச் சம்பவம் நடந்திருப்பது பொதுமக்களிடையே பெரும் கவலையையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அரசியல் தலைவர்கள் பலரும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சாடியுள்ளார்.
__________________________________________________________________________________________________
Three individuals, including canteen workers and the owner, were arrested for the gang rape of a 22-year-old woman at Nandanam Government Arts College in Chennai. The incident has sparked widespread outrage and student protests, raising serious concerns over women’s safety in educational institutions following recent violent crimes in the city.