கைத்தொலைபேசிகளுக்கு அடிமையாகி உள்ளதன் காரணத்தால், சில பதின்ம வயது சிறுவர்கள் பல்வேறு மனநல பாதிப்புகளுக்கு உள்ளாகி இருப்பதாக தேசிய மனநல நிறுவனத்தின் சிறுவர் மற்றும் இளம்பருவ மனநல விசேட வைத்திய நிபுணர் சேனானி விஜேதுங்க தெரிவித்துள்ளார்.
இன்றைய சிறுவர்கள் கைத்தொலைபேசிப் பயன்பாட்டிற்கு அளவுக்கு அதிகமாக அடிமையாகியுள்ளதால், அவர்கள் பல்வேறு மனநலப் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதாக தேசிய மனநல நிறுவனத்தின் விசேட வைத்திய நிபுணர் சேனானி விஜேதுங்க கவலை வெளியிட்டுள்ளார். கடந்த 26ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

கொவிட் காலத்தில் பாடசாலைகள் மூடப்பட்டதால், கல்வி நடவடிக்கைகள் இணையவழியில் முன்னெடுக்கப்பட்டன. அந்தச் சமயத்தில் சமூக ரீதியாக மற்றவர்களுடன் பழக முடியாத சூழல் ஏற்பட்டதால், சிறுவர்கள் தங்களையும் அறியாமலேயே கைத்தொலைபேசிகளுக்குப் பழகிவிட்டனர். இது தற்போது ஒரு பாரிய சமூகப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளதுடன், இவ்வாறான அடிமைத்தனத்தால் பல சிறுவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
கைத்தொலைபேசி மட்டுமன்றி, போதைப்பொருள் பயன்பாட்டிற்கு அடிமையானதாலும் பல பதின்ம வயது சிறுவர்கள் மனநலப் பாதிப்புகளுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருவதாக அவர் சுட்டிக்காட்டினார். குறிப்பாக 13 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் அதிகளவில் இவ்வாறான சிகிச்சைக்காக கிளினிக்குகளுக்கு அனுப்பப்படுவது சமூகத்தில் ஒரு எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளதாக வைத்தியர் மேலும் தெரிவித்தார்.
_________________________________________________________________________________________
Child and adolescent psychiatrist Senani Wijetunga has highlighted a concerning rise in mental health issues among teenagers due to smartphone addiction and drug use. Originally triggered by the shift to online education during the COVID-19 pandemic, this dependency has escalated into a significant social problem, leading to an increase in clinic admissions for those aged 13 to 18.