வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் 37 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 2026.01.18 அன்று பெறப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
இந்த சம்பவத்தில் மலையகப் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தற்போது கல்முனை பகுதியிலுள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
2026.01.15 அன்று குறித்த வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றிக் கொண்டிருந்தபோது, இரவு நேரத்தில் சந்தேகநபர் சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக, சிறுமி பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரை கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகரின் அறிவுறுத்தலின் பேரில், கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் தலைமையில், சிறுவர் பெண்கள் பிரிவினரால் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.