தமிழ் திரையுலகின் மூத்த மற்றும் முன்னணி இயக்குநரான பாரதிராஜா அவர்கள் இன்று காலமானார். திரையுலகில் ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படும் அவரது மறைவு ஒட்டுமொத்த சினிமாவையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சமீபகாலமாகவே அவர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, அதற்கான சிகிச்சைகளை எடுத்து வந்தார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிர் பிரிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவை ஸ்டூடியோக்களுக்குள் இருந்து கிராமத்து மண்ணிற்கு அழைத்து வந்த பெருமை இவரையே சேரும். கிராம மக்களின் வாழ்வியலையும், அவர்களின் எதார்த்தமான உணர்வுகளையும் திரையில் தத்ரூபமாகப் படைத்து தமிழ் சினிமாவில் ஒரு புதிய அலையை உருவாக்கினார். 1977-ல் வெளிவந்த ’16 வயதினிலே’ படம் மூலம் இயக்குநராகக் காலடி எடுத்து வைத்த இவர், தொடர்ந்து ‘கிழக்கே போகும் ரயில்’, ‘புதிய வார்ப்புகள்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘முதல் மரியாதை’ என ரசிகர்களின் நெஞ்சங்களில் என்றும் நீங்கா இடம் பிடித்த எத்தனையோ காவியங்களை தமிழ் சினிமாவிற்குப் பரிசாக அளித்துள்ளார்.
சினிமாவுக்கான வழக்கமான இலக்கணங்களை உடைத்து, மனித உணர்வுகளுக்குத் திரையில் உயிர் கொடுத்த உன்னதக் கலைஞர் அவர். இவருடைய இந்த தனித்துவமான படைப்பாற்றலுக்காக தேசிய விருதுகள் உள்ளிட்ட பல உயரிய அங்கீகாரங்களும், விருதுகளும் இவரைத் தேடி வந்தன.
கேமராவிற்கு பின்னால் நின்று வித்தை காட்டியது மட்டுமன்றி, கேமராவிற்கு முன்னால் வந்து பல திரைப்படங்களில் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த நடிகராகவும் முத்திரை பதித்தார்.
சமீபத்தில் இவரது மகனும், நடிகருமான மனோஜ் பாரதிராஜாவின் திடீர் மறைவு இவரை மனதளவில் பெரிதும் பாதித்திருந்ததாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பாரதிராஜாவின் மறைவு தமிழ் சினிமாவிற்கும், உலகெங்கிலும் இருக்கும் சினிமா ரசிகர்களுக்கும் பேரிழப்பாகும். திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் அவரது மறைவுக்குத் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
Legendary Tamil filmmaker Bharathiraja, affectionately known as ‘Iyakkunar Imayam,’ has passed away following a period of illness. Renowned for revolutionizing Tamil cinema by bringing it to rural landscapes and capturing authentic village life, he debuted with the iconic ’16 Vayathinile’ and directed numerous timeless classics. His demise, following the recent tragic loss of his son Manoj, marks the end of an era, leaving the entire film industry and fans worldwide in deep mourning.