“கடையில் ஆடை திருடியவர்களுக்கு இதுதான் தண்டனை, இதற்கு காவல்துறை தேவையில்லை” என்ற வாசகத்துடன், நபர் ஒருவரைத் தலைகீழாகத் தொங்கவிட்டு சித்திரவதை செய்வது போன்ற காணொளியொன்று அண்மையில் சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சமூக வலைத்தளங்களில் வைரலான இந்த வீடியோ குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், இது திட்டமிட்டு படமாக்கப்பட்ட ஒரு போலி ‘டிக்டொக்’ காணொளி என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கட்டுநாயக்க பகுதியில் கடந்த ஜனவரி 23 அன்று சுற்றுலா சென்ற வீட்டின் உரிமையாளர், தனது வீட்டைப் பாதுகாக்க நண்பர் ஒருவரை அமர்த்தியுள்ளார்.
உரிமையாளர் வீடு திரும்பிய பின், நண்பர்களுக்கு இடையே நடந்த மது விருந்தின் போது ஒரு வினோதமான சவால் விடப்பட்டுள்ளது. தலைகீழாகத் தொங்குபவருக்கு ஒரு மதுபான போத்தல் பரிசாக வழங்கப்படும் என்ற உரிமையாளரின் சவாலை ஏற்று, 39 வயதுடைய நண்பர் ஒருவரே தனது கால்களைக் கயிற்றால் கட்டிக்கொண்டு மாமரத்தில் தொங்கியுள்ளார்.
சுமார் மூன்று நிமிடங்கள் அந்த நபர் தொங்கியபோது, “திருடர்களுக்கு இதுதான் தண்டனை” என உரிமையாளர் வசனம் பேசி வீடியோ எடுத்துள்ளார். பின்னர் அவர்கள் கலைந்து சென்றாலும், இந்த வீடியோ இணையத்தில் பெரும் அச்சத்தை உருவாக்கியது. சமூக அமைதிக்குக் குந்தகம் விளைவித்த குற்றத்திற்காக சம்பந்தப்பட்ட மூவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க கட்டுநாயக்க காவல்துறையினர் தற்போது தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
________________________________________________________________________________________
A viral TikTok video showing a man hung upside down as a supposed punishment for shoplifting has been revealed as a hoax filmed in Katunayake. The stunt was actually a drunken dare where a man agreed to be tied to a tree in exchange for a bottle of liquor, while the house owner recorded fake commentary; police are now taking legal action against those involved for disturbing public peace and misusing social media.