மலையாளத் திரையுலகில் ஒரு பிரம்மாண்ட வெற்றியைப் பதிவு செய்த படம் த்ரிஷ்யம். இந்தத் திரைப்படம் கடந்த 2013 ஆம் ஆண்டில் திரைக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து, கடந்த 2021 ஆம் ஆண்டில் இதன் இரண்டாம் பாகமான த்ரிஷ்யம் 2 வெளியான நிலையில், அந்தப் படத்திற்கும் ரசிகர்கள் தங்களது அமோகமான வரவேற்பைக் கொடுத்திருந்தனர்.
இப்படி அடுத்தடுத்து வெளியான இரண்டு பாகங்களும் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, த்ரிஷ்யம் 3 எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நீண்ட நாட்களாகவே இருந்து வந்தது. அந்த வகையில், ரசிகர்களுக்கு ஒரு சூப்பரான விருந்தளிக்கும் நோக்கில், இயக்குநர் ஜீத்து ஜோசப் மற்றும் மோகன்லால் ஆகியோரின் வெற்றிக் கூட்டணியில் த்ரிஷ்யம் 3 உருவாக்கப்பட்டு, கடந்த மே 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தத் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வந்தாலும், பாக்ஸ் ஆபீஸ் வசூலில் மிகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்த நிலையில், தியேட்டர்களில் வெளியாகி வெற்றிகரமாக 7 நாட்களைக் கடந்திருக்கும் த்ரிஷ்யம் 3 திரைப்படம், உலகளவில் இதுவரை ரூ. 181 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ரிலீசான ஒரே வாரத்தில் ரூ. 181 கோடிக்கும் மேல் அள்ளிக்குவித்து சாதனை படைத்துவரும் இந்தத் திரைப்படம், வரும் நாட்களிலும் வசூல் வேட்டையில் பட்டையைக் கிளப்பும் என்று சினிமா வட்டாரங்களில் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.