தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் அபரெக்க மற்றும் பெலியத்த பகுதிகளுக்கு இடைப்பட்ட 140 கிலோமீட்டர் மையில் கல் அருகே சந்தேகத்திற்குரிய வாகனம் ஒன்று நிற்பதாக வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் அங்கு சென்ற அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்துப் பொலிஸார், அந்த வாகனத்தைக் கைப்பற்றி மேலதிக விசாரணைகளுக்காக திஹகொட பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
மீட்கப்பட்ட வாகனத்தின் இலக்கத் தகட்டைச் சோதித்தபோது, அதே இலக்கத்தைக் கொண்ட மற்றுமொரு வாகனம் இரத்தினபுரியைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமானது எனத் தெரியவந்தது. இருப்பினும், இரத்தினபுரியில் பதிவு செய்யப்பட்ட வாகனம் வெள்ளை நிறமாகும், ஆனால் மீட்கப்பட்ட வாகனமோ மெரூன் நிறத்தில் உள்ளது. அத்துடன் இரண்டினதும் எஞ்சின் இலக்கங்களும் வெவ்வேறானவை என பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்தச் சொகுசு வாகனம் தொடாங்கொட நுழைவாயில் ஊடாக அதிவேக வீதிக்குள் நுழைந்து, மத்தள நோக்கிப் பயணித்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. திஹகொட பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட அந்த வாகனத்தைச் சோதனையிட்டபோது, அதற்குள் குருநாகல் பகுதியிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றின் பெயரைக் கொண்ட சான்றிதழ் மற்றும் நாட்குறிப்பு (Diary) ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அந்த நாட்குறிப்பில் இருந்த அடையாள அட்டைப் பிரதியை அடிப்படையாகக் கொண்டு பொலிஸார் நடத்திய விசாரணையில், அது பொதுஹெர பகுதியைச் சேர்ந்த ஒருவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த நபர் கடந்த ஜனவரி 25ஆம் திகதி வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
______________________________________________________________________________________________________________________________________
Police have seized an abandoned luxury vehicle on the Southern Expressway between Aparekka and Beliatta. Investigations revealed that the car displayed a duplicate license plate belonging to a different white vehicle in Ratnapura, while the seized car is maroon with a different engine number. Inside the vehicle, authorities found documents linked to a resident of Pothuhera who has been missing since January 25th, and further investigations are underway.